புதுச்சேரி, ஜன. 9: அரசு பஸ்களை இயக்க வலியுறுத்தி பிஆர்டிசி அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து தொழிற்சங்கங்கள் விடுத்த முழு அடைப்பு காரணமாக புதுவையில் நேற்று தனியார், பிஆர்டிசி பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. இதுகுறித்த தகவல் கிடைக்கவே பாஜக மாநில தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன், கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட சிலருடன் பிஆர்டிசி பணிமனைக்கு நேற்று மதியம் சென்றார்.அங்கிருந்த மேலாண் இயக்குனர் குமார், பொதுமேலாளர் ஏழுமலை ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முழு அடைப்புக்கு அரசு நிறுவனமான பிஆர்டிசியே ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஸ்களை இயக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸ் பாதுகாப்பு குறைபாடுகளை பிஆர்டிசி நிர்வாகம் சுட்டிக் காட்டிய நிலையில் காவல்துறை தலைமையை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பிறகு பிஆர்டிசி பணிமனையில் இருந்து சில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான பேருந்துகளை உடனே இயக்க டிரைவர்கள், நடத்துனர்கள் மறுத்துவிட்டனர்.