காட்டுமன்னார்கோவில், ஜன. 4: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சாலைக்கரை ரோடு என்ற சாலையில் நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வாகன நெருக்கடி அதிகரிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை போடப்பட்டது. காட்டுமன்னார்கோவில் நகர் பகுதியில் துவங்கி 2 கிலோமீட்டர்கள் கடந்து ரம்ஜான்தைக்கால் பகுதி சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும்.
திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள் போன்றவைகள் இந்த சாலையில் உள்ளன. குறிப்பாக பெரியார் நகர் பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வட்டார உதவி வேளாண்துறை அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு இந்த சாலை வழியாகத் தான் சென்று வருகின்றனர். உருத்திரசோலை, இருதயபுரம், பெரியார் நகர், வடக்கு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க சாலைக்கரை சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.