அம்பை: கல்லிடைக்குறிச்சியில் பிரதான சாலையான 6ம் நம்பர் ரோட்டில் பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கல்லிடைக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 6ம் நம்பர் ரோட்டில் நீண்ட நாட்களாக வேகத்தடை அமைக்காமல் இருந்தது, இந்த ரோட்டில் வரிசையாக கடைகளும், வீடுகளும் நிறைந்து இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். குழந்தைகளும் விளையாடுவார்கள் ஆடு மாடுகள், தெரு நாய்கள் போன்றவைகளும் அலைந்து கொண்டிருக்கும், இந்நிலையில் இந்த ரோட்டில் வாகனங்களில் கடந்து செல்பவர்கள் கார், பைக் வாகனங்களை மிக வேகமாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்தன.
இதனைத்தொடந்து அந்தந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள், சாலைகள் இணையும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தனர். விபத்துகள் அடிக்கடி நடப்பதாலும், போலீசார் ரோந்து சோதனையின் போது வாகனங்கள் மிக வேகமாக கடந்து செல்வதை தெரிந்து கொண்டதையடுத்து காவல்துறை மற்றும் கல்லிடை பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் 6ம் நம்பர் ரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து தேர்வு செய்து பல்வேறு இடங்களில் வேகத்தடைஅமைக்கப்பட்டது,
இருப்பினும் மெயின் பஜாரில் இருந்து வெளிவரும் ரோட்டின் ஆரம்பம் முதல் அகத்தியர் கோவில் வரை உள்ள பகுதி குறுகலாக இருப்பதால் அந்த பகுதியிலும் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், மக்கள் நலன் கருதி வேகத்தடை அமைக்கும் பணியில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்ட அம்பை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ், கல்லிடை காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி, உதவி ஆய்வாளர் முருகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், பேரூராட்சி அதிகாரிகள் ஐசக், முருகன் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.