பெரம்பலூர்,டிச.19: பாஜக தேசிய செயலாளர் வரவேற்பு தொடர்பான சம்பவத்தில் சிவசேனா கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரம்பலூர் மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கடந்த மாதம் 23ம்தேதி மஹா திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. விழாவிற்கு பாஜக கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா வந்திருந்தார். அவரை சிவசேனா கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளரான தஞ்சை சசிக்குமார் என்பவர் அழைத்து வந்தார்.
எச்.ராஜா வருகையை முன்னிட்டு அவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை 23ம் தேதிக்கு முன்பே சசிக்குமார் பெரம்பலூரில் நடத்தியுள்ளாராம்.
இந்த கூட்டத்தை தனக்கு சொல்லாமல் நடத்தியது தொடர்பாக, ஆத்திரமடைந்த சிவசேனா கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் மேலப்புலியூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து, சசிக்குமாருக்கு போனிலும் மற்றும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடி வாரத்தில் நேரிலும், எளம்பலூர் மலையடி வாரத்தில் அரிவாளை காட்டியும் கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் சில தினங்களுக்கு முன் போனில் மிரட்டல் விடுத்ததால் சசிக்குமார் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவர் பிச்சை முத்துவை கைது செய்தனர். இதில் கைதான பிச்சைமுத்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.