காரிமங்கலம், டிச.18: மணியம்பாடி அடுத்த வெங்கடரமண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா மற்றும் சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடக்கிறது. தர்மபுரியை அடுத்த மணியம்பாடியில் வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று(18ம் தேதி)அதிகாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு யாக சாலை பூஜை, 4.30 மணிக்கு யாக சாலை நிறைவு நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு வடக்கு வாயிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோபுர கும்பாபிஷேகம், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. சரியாக 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள் பெறவேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் மனோகரன், ஊர்கவுண்டர் ஜெயவேல், செயலாளர் அருள்மணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பழனிசாமி, தங்கவேல், மணியம்பாடி மனோகரன், மந்திரி கவுண்டர் பொன்னுசாமி, முன்னாள் தர்மகர்த்தா பழனி, ஒமேகா பிரபு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் துத்தியப்பன் (எ) மணி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.