ஈரோடு, டிச.18: ஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில்பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஈரோடு வீரப்பன்சத்திரம், காவிரி வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(62). இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் வீரப்ன்சத்திரம் மிட்டாய்காரதெருவில் உள்ளது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பேப்பர்கள், பாட்டில் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் குடோனிற்கு யாரும் வரவில்லை. இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குடோன் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். அதிகாலை 5 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.