பட்டுக்கோட்டை, டிச. 12: பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் (மத்திய புரீஸ்வரர்) கோயில். இந்த கோயிலில் கடந்த நவம்பர் 19ம் தேதி கார்த்திகை முதல் சோமவார திருவிழா துவங்கியது. 26ம் தேதி இரண்டாவது சோமவார திருவிழா, டிசம்பர் 3ம் தேதி மூன்றாவது சோமவார திருவிழா நடந்தது. அன்றைய தினம் தஞ்சை மாவட்ட நீதிபதி சிவஞானம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். நேற்று முன்தினம் நான்காம் மற்றும் கடை சோமவார திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு சோமவார திருவிழாவிலும் பக்தர்கள் வந்து ஆடு, கோழி, நெல், பயறு, உளுந்து மற்றும் நவதானியங்களை காணிக்கைகளாக பொதுஆவுடையாருக்கு செலுத்தி வழிபட்டனர்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சம்பத்குமார் கூறுகையில், பொது ஆவுடையாருக்கு வரப்பெற்ற காணிக்கை இனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டது. விழாவிற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையிலான போலீசாருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார். ஏற்பாடுகளை தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார் உத்தரவின்பேரில் கோயில் செயல் அலுவலர் சம்பத்குமார், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் செய்திருந்தனர்.