திருப்பூர், டிச.4: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனை சாவடியில் போலீசார் வழக்கம்போல் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி அவரிடம் போலீசார் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார்கள். ஆனால் அவர் ஆவணங்களை காண்பிக்காமல் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா (29) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் ஓட்டி வந்தது ராமையா காலனியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் இருந்து திருடிய பைக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.