கும்பகோணம், நவ. 28: கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கழிவுநீர் ஊற்றிய கடைகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஓட்டல், டீக்கடைகள் உள்ளன. இந்நிலையில் பயணிகள் பேருந்துக்காக நிற்கும் பகுதியில் கழிவுநீர், கழிவுகளை உணவு, டீக்கடைக்காரர்கள் ஊற்றினர். இதனால் பயணிகள் நிற்கும் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பயணிகள் புகார் செய்தனர். அதன்பேரில் பேருந்து நிலைய வளாகத்தில் நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேற்று காலை சோதனை செய்தனர். இதில் தஞ்சை மார்க்கத்தில் உள்ள டீக்கடை மற்றும் உணவு கடைகாரர்கள் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் கழிவுநீர் ஊற்றியது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகர்நல அலுவலர் பிரேமா எச்சரிக்கை விடுத்தார்.