×

பாஜக பந்த் போராட்டத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்

புதுச்சேரி, நவ. 22:   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள இடது முன்னணி ஆட்சியில் கோயில், மசூதி, சர்ச்சுகள் பாதுகாக்கப்பட்டன. முந்தைய அரசுகளை விட கூடுதல் நிதி ஒதுக்கி பக்தர்களின் வசதிக்காக அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் அரசியல் உள்நோக்கத்தோடு பாஜக, ஆர்எஸ்எஸ் வன்முறைகளை நடத்தி பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து ஆட்சியை அகற்றிட முயற்சிக்கிறார்கள். சட்டத்தில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது உடைய பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பினை பாஜக, காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்கள் தனது அரசியல் ஆதாயங்களுக்காக திட்டமிட்ட வன்முறை நடத்தி
வருகிறது. பாஜகவின் நான்கரை ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் உழைப்பும் அதலபாதாளத்தில் வீழ்ந்து இருக்கின்றன. கார்ப்ரேட்டுகளின் சொத்துக்கள் பலமடங்கு பெருகியுள்ளன. மிகப்பெரும் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. நாடாளுமன்றம், நிதி பரிபாலன அமைப்பு, சிபிஐ அமைப்பு, தேர்தல் ஆணையம் என ஜனநாயக கட்டமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. இந்நிலையில் வளர்ச்சி என்ற முழக்கம் இனியும் எடுபடாது என்பதை உணர்ந்த பாஜக, ஆர்எஸ்எஸ் மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது. ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். அவ்வாறு உருவாக்கப்பட்ட நம் சமூக அமைப்பை சீர்குலைக்க முயலும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் இழிவான அரசியலை மக்கள் நிராகரித்திட வேண்டுகிறோம். எனவே, மதவெறி அரசியலுக்காக புதுச்சேரியில் நடைபெற உள்ள பாஜகவின் பந்த் போராட்டத்தை மக்கள் நிராகரித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...