புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே தலையில் முக்காடு போட்டு சுதேசி- பாரதி மில் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் பராம்பரியமிக்க சுதேசி மற்றும் பாரதி மில்கள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவை ஊதியம் வழங்கக்கோரி பஞ்சாலை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ள சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை தொழிலாளர்களின் 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் கொடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள பிஎப், இஎஸ்ஐ பணத்தை உடனே செலுத்த வேண்டும், 2 பஞ்சாலைகளையும் நவீனப்படுத்தி இளைஞர்களின் வேலையை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மில்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கவர்னர் மாளிகை அருகே நேற்று முக்காடு போட்டு நூதன தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி அபிஷேகம், குப்புசாமி, பட்டாளி தொழிற்சங்கம் ஜெயபாலன், ஐஎன்டியுசி ஞானசேககர், சிஐடியு குணசேகரன், அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி, சுதேசி-பாரதி மில் தொழிற்சங்கம் கமலக்கண்ணன், பாஸ்கர், கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது கவர்னர் கிரண்பேடி மற்றும் அரசைக் கண்டித்து மில் தொழிலாளர்கள் கோஷமிட்டனர். தங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை பலகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக போராட்டக்குழு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்