×

கேதார கவுரி விரதத்தையொட்டி கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, நவ.8: கிருஷ்ணகிரியில் கேதார கவுரி விரதத்தையொட்டி கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரியாமல் இறுதி வரை மகிழ்வுடன் வாழ்வதற்காக பெண்கள் கேதார கவுரி விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் கணவன், மனைவி இருவரும் லட்சிய தம்பதிகளாக வாழ்வர். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை, தொடர்ந்து 21 நாட்களுக்கு பூஜை செய்தோ பெண்கள் வழிபட்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

 நேற்று, கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோயில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதிவிநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில் பெண்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதேபோல் கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர். இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


Tags : women ,temples ,Kedari ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு