கூடலூர்,நவ.2: கூடலூர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனால் மக்கள் அவதியடைவதாக எழுந்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏ திராவிடமணி நேற்று அப்பகுதியில் ஆய்வு நடத்தினார். கூடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். அகலம் குறைந்த சாலைப் பகுதிகளில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிலர் சாலையோரம் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடிகின்றது. மேலும் சென்டர் மீடியன்கள் இடையே பொதுமக்கள் இருபுறமும் உள்ள வியாபார நிலையங்களுக்கு சென்றுவர ஒரு சில இடங்களில் மட்டுமே இடைவெளி விட்டுள்ளதால் பொதுமக்கள் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொது மக்கள் சாலையைக் கடக்க மேலும் தேவையான இடங்களில் இடைவெளி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் கூடலூர் திமுக எம்எல்ஏ திராவிடமணி கூடலூர் பஜார் பகுதியில் சாலையின் நடுவே வைக்கப்பட்டு சென்டர் மீடியன் குறித்து ஆய்வு நடத்தினார். உடன் தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சாமிநாதன், இளநிலை பொறியாளர் பிரேம்குமார், கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர். அப்போது ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி, ராஜகோபாலபுரம், பெட்ரோல் பங்க் பகுதி, எல்ஐசி மற்றும் தேவர் சோலை பகுதிகளில் மழை நீர் வடிந்து செல்லும் வடிகால்கள் சேதமடைந்து மழை நீர் சாலையில் வழிந்து செல்வவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். வடிகால்வாய்கைள சீரமைக்கவும் மழை நீர் வழிந்தோட முடியாமல் அவற்றை அடைத்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை எம்எல்ஏ திராவிடமணி கேட்டுக் கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்டர் மீடியன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆய்வின் போது திமுக செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், நகர செயலாளர் _ ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.