×

தொப்பூர் கணவாயில் உருளைகிழங்கு லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

தர்மபுரி, நவ.2: தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் உருளைகிழங்கு லோடு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்தில் இருந்து மேட்டுபாளையத்திற்கு உருளைக்கிழங்கு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த அர்ச்சுனன்(43) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில், நேற்று அதிகாலை 2 மணியளவில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆஞ்சநேயர் கோயில் இறக்கத்தில் சென்றபோது, அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியதில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் லாரியில் இருந்த உருளைகிழங்குகள் சாலையில் சிதறியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அர்ச்சுனனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதே போல், மற்றொரு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார், போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு, பின்னர் வாகனங்கள் சென்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,road ,Thapoor ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்