புதுச்சேரி, அக். 23: புதுவையில் ஆடு திருடும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சமீபகாலமாக ஆடுகள் அதிகளவில் திருட்டு போனது. மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பாததால் அதை தேடி அலைந்து ஏமாந்த உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் முறையிட்டனர். இருப்பினும் ஆடு திருட்டு சம்பவத்தை காவல்துறை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக ஆடுகள் திருட்டு போவது தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில் புதுச்சேரி, குருமாம்பேட், குடியிருப்பு பகுதியில் சாலையோரம் மேய்ச்சலில் இருந்த ஆடு ஒன்றை 2 இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஆட்டை இளைஞர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த சிசிடிவி வீடியோ காட்சி மக்களிடம் அதிகளவில் பரவி வரும் நிலையில் இவ்விவகாரம் மேட்டுப்பாளையம் போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் இதுவரை ஆடு திருட்டு தொடர்பாக எந்த புகாரும் வராத நிலையில், சிசிடிவி காமிராவில் பதிவான ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆடுகளை தொலைத்த உரிமையாளர்களிடம் விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதையடுத்து கைது நடவடிக்கை பணிகளை வடக்கு எஸ்பி ரக்சனாசிங் முடுக்கி விட்டுள்ளார். சிறப்பு அதிரடிப்படையும் விசாரணையில் இறங்கியுள்ளதால் விரைவில் ஆடு திருட்டு கும்பல் போலீஸ்வசம் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.