கரூர், அக். 10: கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து விபரங்களை அளிக்க கரூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் 20வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. இப்பணியில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்கை முறை கருவூட்டாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராமப்பகுதியில் 4500 குடியிருப்புகள் எனவும், நகரப்பகுதியில் 6000 குடியிருப்புகள் எனவும் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 58 கணக்கெடுப்பாளர், 12 மேற்பார்வையாளர், 2 கூர்ந்தாய்வு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் விவசாயிகளிடம் உள்ள பசு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, நாய்,கோழி, பன்றி, குதிரை மற்றும் விவசாயம் தொடர்பான கருவிகள், மீன்வளர்ப்பு உபகரணங்கள் தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள கால்நடை கணக்கெடுப்பாளர்களிடம் தங்களிடம் உள்ள கால்நடைகள் மற்றும் உபகரணங்கள் குறித்த விபரங்களை அளித்து முழு ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.