×

ராகுலின் பேச்சு சிறுபிள்ளைதனமானது: சாவர்கர் பேரன் விமர்சனம்

மும்பை:  சாவர்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திகாட்ட வேண்டும் என்று சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் சவால் விடுத்துள்ளார்.  பிரதமர் மோடி குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்பியான ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் எம்பி பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, எனது பெயர் சாவர்கர் கிடையாது  எனது பெயர் காந்தி, காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார்” என்று கூறியிருந்தார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் ராகுலின் கருத்து குறித்து சாவர்கர் பேரன்  ரஞ்சித் சாவர்கர் கூறுகையில், ‘‘ராகுலின் பேச்சானது சிறுபிள்ளைதனமானது. நான் சாவர்கர் கிடையாது; நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார். சாவர்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும்  ஆதாரத்தை காட்டுமாறு நான் ராகுலுக்கு சவால் விடுகிறேன். தேசபக்தர்களின் பெயர்களை அரசியலை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துவது தவறானது மற்றும் வருந்தத்தக்கது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.



Tags : Rahul ,Savarkar , Rahul's speech childish: Savarkar's grandson reviews
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...