ஸ்டோக்ஹோம்: பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கலாம் என்று நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியிருப்பது குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானி நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் 10ம் தேதி, அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பல்வேறு துறைகளில் மனித குலத்திற்கு பாடுபட்ட பிரபலங்களுக்க நோபல் பரிசு வழங்கப்படும். சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் இந்த நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அமைதிக்கான நோபல் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் மிகப்பெரிய போட்டியாளராக இந்திய பிரதமர் மோடி உள்ளார். உலக நாடுகள் இந்தியாவை வல்லரசு நாடாக அறிவித்து, பிரதமர் மோடியை போன்று உலக தலைவர்கள் இருக்க வேண்டும். அவர் இன்று உலகின் அமைதிக்கு நம்பகமான மனிதராக திகழ்கிறார். நான் பிரதமர் மோடியின் ரசிகராக உள்ளேன். போரை தடுப்பதிலும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டக் கூடியவை. பிரதமர் மோடியின் சிறந்த கொள்கைகளால், அந்த நாடு பணக்கார நாடாக மாறி வருகிறது. நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியான தலைவராக கருதுகிறேன். அவர் அமைதி நோபல் பரிசை வென்றால், அந்த தருணம் வரலாற்று சிறப்பாக இருக்கும்’ என்றார்.
இவரது கருத்துகள் சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ஏரா இன்டர்நேஷனல் ரிப்போர்ட்டர் அசோசியேஷனின் (மேற்கு வங்கம்) பொதுச் செயலாளர், நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ள கருத்து குறித்து கூறுகையில், ‘அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானராக இந்திய பிரதமர் மோடியை கூறமுடியும். காரணம் அவரது தலைமையிலான அரசு, கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு பலவகையிலும் உதவியது. சமீபத்தில் துருக்கியில் நடந்த நிலநடுக்க பேரழிவின் போதும், இந்தியா பல்வேறு வகைகளிலும் உதவியது. உக்ரைன் - ரஷ்யப் போர் விவகாரத்தில் மோடியின் கருத்தை உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்’ என்றார்.