×

எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி அவைத்தலைவர் இருக்கை அருகே முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாஜக திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.

அச்சமயம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினரும், அதானி குழும முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மீண்டும் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்தது. தற்போது எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 4வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : Houses of Parliament ,BJP , Opposition, BJP MPs, adjourned for the whole day
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...