ஆவடி: 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய 201 போலீஸ்காரர்களுக்கு நல்லொழுக்க சான்றிதழை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கி சிறப்பித்தார். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 201 காவலர்களுக்கு ரூ.2000 மற்றும் நல்லொழுக்க சான்றிதழ்கள் வழங்கும் விழா ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆவடி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, 201 காவலர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இதன் பின்னர் ஆணையர் பேசும்போது, பதக்கம் பெற்ற அனைத்து காவலர்களையும் வாழ்த்துகிறேன். திறமையாக பணியாற்றி காவல் துறைக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும். மேன்மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார். இந்த விழாவில், கூடுதல் காவல் இணை ஆணையர் விஜயகுமார், தலைமையிடம் நிர்வாகம் துணை ஆணையர் உமையாள், உதவி ஆணையர் கனகராஜ், கருணாகரன் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
