காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, கொட்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளில், விவசாயிகளின் நலனுக்காக புதிய நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்நிலைகளில் 95% தண்ணீர் நிரம்பியது. இதனால், விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில், நடப்பு நவரை பருவத்தில் மாவட்டம் முழுவதும் 62615 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடைக்கு நெல் தயாராக உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் நலனுக்காக 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, கொட்டவாக்கம் ஆகிய ஊராட்சியில் விவசாயிகள் நலனுக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். இதன்மூலம் கோவிந்தவாடி, கொட்டவாக்கம் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்நிகழ்வில், தமிழ்நாடு நுகர் பொருள் மேலாளர் சத்யவதிமுத்து, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.