×

சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஈரோடு: வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது, அவர் வடமாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டல் விடுத்தும் பேசினார். இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் அளித்த புகாரின்பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தி, மிரட்டி பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேசியது உட்பட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே, இதே பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நாம் தமிழர் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குடன் தற்போது, வடமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்தி பேசிய வழக்கும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Seaman , Seeman is also booked under 3 sections
× RELATED சொல்லிட்டாங்க…