சென்னை: உழவர்களின் நிலம் பறிக்கு் ம்என்.எல்.சி நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி கடலூர் மாவட்ட பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்ட பாமக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு உழவர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவிற்கு நன்றி.இது, என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல.
அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கும்தான். எனவே, இன்று முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளுக்கும், 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.