பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி கிராமத்தில், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.56 லட்சம் நிதி சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கான கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்திரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.