தாம்பரம்: தாம்பரம் மாநகர திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சிட்லபாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், திருச்சி சிவா எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இத்தனை நாட்கள் கிடப்பில் வைத்திருந்து, இப்போது மீண்டும் திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கிறார் என்றால், அவருக்கு அதில் உடன்பாடு இல்லை என்று அர்த்தம், ஏழை எளிய ஆண்கள், பெண்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து, கவலைப்படாத ஒருவர் ஆளுநராக இருப்பது வேதனைக்குரிய ஒன்று, இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பார்.
தமிழ்நாட்டில் மக்களை காக்க எல்லா வகையிலும் பாடுபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெகன், சிட்லபாக்கம் சுரேஷ், ஜோதி குமார், திமுக நிர்வாகிகள் கருணாகரன், வேல்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.