அகர்தலா: திரிபுரா முதல்வராக 2வது முறையாக மாணிக் சகா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திரிபுரா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் 60 இடங்களில் பா.ஜ கூட்டணி 33 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் முதல்வர் பதவிக்கு 32 இடங்களை பிடித்த பா.ஜவுக்குள் திடீர் போட்டி ஏற்பட்டது. தற்போதைய முதல்வர் மாணிக் சகா, முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்த ஆலோசனை அடிப்படையில் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் மாணிக் சகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று நடந்த விழாவில் தொடர்ந்து 2வது முறையாக திரிபுரா மாநில முதல்வராக மாணிக்சகா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் சத்யதேவ் நரேன் ஆர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாணிக் சகாவுடன் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் சுக்லா சரண் நோட்டியோ என்பவர் கூட்டணி கட்சியான ஐபிஎப்டியை சேர்ந்தவர். அமைச்சரவையில் 4 பேர் புதிய முகங்கள். 3 பழங்குடியின எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
அதே போல் தான்புர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் 3 அமைச்சரவை இடம் காலியாக உள்ளது. மாணிக் சகா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ேஜபி நட்டா, மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் விழாவில் பங்கேற்கவில்லை. அதே சமயம் 13 எம்எல்ஏக்களை கொண்ட திப்ரா கட்சியினர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்.
* திப்ரா கட்சி தலைவருடன் அமித்ஷா திடீா் சந்திப்பு திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 13 இடங்களை வென்று திப்ரா மோத்தா கட்சி சாதித்தது. பழங்குடியின பகுதியில் பிரபலம் ஆன இந்த கட்சியின் தலைவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்த பிரதியோத் கிஷோர் தெப்பர்மா. நேற்று மாணிக் சகா பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென தெப்பர்மாவை சந்தித்து பேசினார்.