சென்னை: தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களில் ஆர்வமும், திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும், தேவையான அனைத்து உதவிகளை செய்ய, அந்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று சேரும் வரை, அவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த செயல்பாடுகள், மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போது எந்தமாற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள செம்மைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கும்.
இவ்வாறுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.