திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை வட்டம் பென்னாலூர்பேட்டையில் இருந்து (த.எண்.டி41 ஏ) அரசுப் பேருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில், பேருந்தை ஹேமநாதன் ஓட்டி வந்தார். நடராஜன் என்ற நடத்துனரும், 39 பயணிகளும் பேருந்தில் இருந்துள்ளனர். திருப்பாச்சூர் அருகே அரசு பேருந்து நின்று கிளம்பியபோது, திடீரென மர்ம நபர்கள் பேருந்து மீது கற்களை வீசியதால் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து ஓட்டுனர் ஹேமநாதன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தினர், நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் இதே பேருந்தில் பயணித்திருந்தார், திருப்பாச்சூரில் அவர் வீட்டு முன்பு பேருந்தை நிறுத்தச் சொல்லியும், பேருந்து நிற்காமல் சென்றதால் அந்த இளைஞர் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.