×

நாலாந்தர பேச்சாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு : எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அதிமுக தலைமை அலுவலகம் வெறிசோடியது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தேடி கொடுத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியை சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் நாலாந்திர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றி அமைந்துள்ளது. 20 மாத திமுக - திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.வெற்றிக்காக அயராது உழைத்த அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் நன்றி என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, யார் பிரதமராக இருக்கக்கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை முடிவு” என்று தெரிவித்தார்.

Tags : Speaker ,Edabadi Palanisamy ,Chief Minister ,MC. G.K. Stalin , Nalandhara, Speaker, Edappadi Palaniswami, People, Response
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...