×

ஷிவமொக்காவில் விமான நிலையம் திறப்பு பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகை: விவசாயிகளுக்கு ரூ.2000 உள்ளிட்ட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்

பெங்களூரு: ஷிவமொக்கா விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் ரயில்வே, சாலை, குடிநீர் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகிறார். இதை முன்னிட்டு ஷிவமொக்கா மற்றும் பெலகாவியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி புதிய விமான நிலையத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து வைப்பதுடன் ரயில்வே, குடிநீர், சாலை உள்ளிட்ட திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

ஷிவமொக்கா விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடம் பாஜவின் கட்சி சின்னம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 300 பேர் விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் திறனுடன் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஷிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, பல்வேறு  திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பெலகாவி செல்கிறார். பெலகாவியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கும் மோடி, பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 13வது தவணையான சுமார் ரூ.16,000 கோடியை எட்டு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நேரடி பணம் பட்டுவாடா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குகிறார்.

இதையடுத்து ரூ.190 கோடி செலவில் மறுவடிவமைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.930 கோடியிலான லோண்டா-பெலகாவி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஷிவமொக்கா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Shivamogga ,PM ,Modi ,Karnataka , Shivamogga Airport inaugurated, PM Modi to visit Karnataka today
× RELATED நான் ஜெயிப்பது உறுதி: பாஜவில் இருந்து...