×

25 கிலோ தங்கம் கடத்திய ஆப்கான் தூதரக பெண் அதிகாரி திடீர் ராஜினாமா

புதுடெல்லி: மும்பை விமான நிலையத்தில் 25 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிக்கிய ஆப்கானிஸ்தான் தூதரக பெண் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் அந்நாட்டின் பொறுப்பு தூதராக ஜகியா வர்தக், கடந்த ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அவர் மும்பையில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25ம் தேதி துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடல் முழுவதும் ரூ.18.6 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தூதரக பதவியில் இருப்பதால் ஜகியாவை கைது செய்யாத அதிகாரிகள் அவரிடமிருந்து 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், ஜகியா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், தனிப்பட்ட முறையில் தனக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள், சதிகள் நடப்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தங்கம் கடத்தல் விவகாரம் குறித்து அவர் குறிப்பிடவில்லை.

The post 25 கிலோ தங்கம் கடத்திய ஆப்கான் தூதரக பெண் அதிகாரி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Afghan ,New Delhi ,Mumbai airport ,Zagiya Vardak ,Delhi ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்