×

தஞ்சை, புதுகையில் ஜல்லிக்கட்டு: 600 வீரர்கள் மல்லுக்கட்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில் கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சை, புதுகை, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ ரஞ்சித், வல்லம் டிஎஸ்பி நித்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்மசொப்பமாக களத்தில் நின்று விளையாடியது.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சேர், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபடி வீரர், சிறந்த காளைக்கு பைக் பரிசாக வழங்கப்படவுள்ளது.

திருவப்பூர்: புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் புதுகை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு பீரோ, மிக்சி, கட்டில், எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டன.


Tags : Jallikattu ,Tanjore ,Pudugai , Jallikattu in Tanjore, Pudugai: 600 players wrestle
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை