×

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை

* மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம்
* கோவை ஈஷா மைய விழாவிலும் பங்கேற்பு

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனி), நாளை (ஞாயிறு) ஆகிய 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று காலை 8.45 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை புறப்படுகிறார். 11.45 மணிக்கு மதுரை வந்து சேருகிறார்.  அங்கிருந்து காரில் புறப்பட்டு, பகல் 12.45 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலை அடைகிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். அதன்பின், பிற்பகல் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 3.10 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

மாலையில் கார் மூலம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார். மாலை 6 மணிக்கு ஆதியோகி சிலை மற்றும் தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அவரை, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு வரவேற்கிறார்.
இரவு 9.15 மணிக்கு ஈஷா யோக மையத்தில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு கோவை சுற்றுலா விருந்தினர் மாளிகை வந்து தங்குகிறார்.

நாளை (ஞாயிறு) காலை காரில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 12 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் திரும்பும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : President ,Dravupati Murmu ,Tamil Nadu , President, Thirupati Murmu, visit to Tamil Nadu
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...