இந்தோனேசியா: இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 39 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் கடந்த 10ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெயபுரா நகருக்கு தென் மேற்கே கடலுக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்; சிலர் காயமடைந்தனர். சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
