காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற்றது. மகாபாரத பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி பிரமாண்டமாக துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்கள காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.
இதில், பீமன் வேடமணிந்தவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வெளியேறியது. இதை திரவுபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை 3 முறை வலம் வந்து சபதம் முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, காப்பு கட்டி விரதமிருக்கும் பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் பிள்ளையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீதிரவுபதி அம்மனை வழிபட்டனர்.