கேப்டவுன்:தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த குரூப் பி பிரிவுகளுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியில் டிரையன் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் ஒவ்வொருவரும் 0, 10, 12, 1, 4, 7 என்று சொற்ப ரன்களில் அடுத்தடுத்து சீட்டு கட்டுபோல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.தென் ஆப்பிரிக்கா சார்பில் எம்லாபா 3 விக்கெட்டுகளும், காப் மற்றும் டிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருந்தது. குரூப் ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணியும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன. இன்று நடக்கும் 8வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
