சென்னை: கோயம்பேட்டில், பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தும், காதலர் தின மோகம் குறைந்ததால் ரோஜாக்களின் வியாபாரம் மந்தமாக நடைப்பெற்றது. காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அப்போது காதலர்கள் ரோஜா பூக்களை கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். இதனால், ரோஜா பூக்களின் பங்கு மிக அதிகம் என்பதால், அதற்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பூ வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஒரு லட்சம் பன்ச் வரை ரோஜா பூக்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஒன்றரை லட்சம் பன்ச் ரோஜா பூக்கள் வந்தன. ஆனால், அதற்கு மாறாக நேற்று பூ மார்க்கெட்டில் வியாபாரம் மந்தமாக இருந்தது.
கடந்த ஆண்டு, ஒரு கட்டு ரோஜா ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. இந்தாண்டு, ஒரு கட்டு ரோஜா ரூ.400 முதல் ரூ.600 வரை விற்கப்படும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பூக்கள் விற்பனை ஆகவில்லை. ஒரு கட்டுரோஜா ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டது. காதலர் தினத்தில் ரோஜா வாங்கி கொடுப்பதை பெரும்பாலானவர்கள் ஏற்பதில்லை. ஆடைகள், நகைகள், ஓட்டல்களில் டின்னர் என்று கலாசாரமே மாறிவிட்டது என்கின்றனர் இளசுகள்.