×

மத்திய கைலாஷ் சந்திப்பில் எல்-வடிவ 2 வழிச்சாலை மேம்பால பணிகள் தொடங்கியது

* போக்குவரத்து நெரிசல் 60% குறையும்
* நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
 
சென்னை: மத்திய கைலாஷ் சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எல்- வடிவிலான, 2 வழிச்சாலைக்கான உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறினார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில், மத்திய கைலாஷ் சந்திப்பானது, ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கிறது. இந்த சாலைகளில் அதிகளவு ஐடி நிறுவனங்கள் உள்ளதால் வாகன போக்குவரத்து பரபரப்பாகவே காணப்படும்.

இதனால், அந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனம் ஓட்டுவதும், சாலையை கடப்பதும், உரிய நேரத்தில் அலுவலகம், வீடுகளுக்கு போய் சேர்வதும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இந்திரா நகர் சிக்னல் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலம் வரை ரூ.49.50 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. இந்நிலையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் வாகனங்கள் கடந்து செல்ல 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே, சர்தார் பட்டேல் சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்க கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு வழித்தட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கை, சீரமைப்பு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மேம்பாலம் கட்டுமான பணிக்கு ரூ.31.44 கோடியும், மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைக்க ரூ.5 கோடியும், வழிகாட்டி பலகை வைக்க ரூ.40 லட்சமும், சுற்றுசுவர் அமைக்க ரூ.35 லட்சம், மேம்பாலத்தில் விளக்குகள் வைக்க ரூ.50 லட்சம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க ரூ.5 லட்சம், மரங்கள் நட ரூ.3 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. கட்டுமான காலத்தில் பயணிகளுக்கு சிரமமாக இருந்தாலும், எதிர்காலத்தில் வாகன ஓட்டிகள் சிக்னலுக்காக மத்திய கைலாஷ் சந்திப்பில் நிற்க வேண்டி இருக்காது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: ராஜீவ் காந்தி சாலையில் ஏற்படும் 60% போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தற்போதுள்ள காந்திமண்டபம் மேம்பாலத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இருந்து புறப்பட்டு ஓஎம்ஆர் சாலையில் தரையிறங்கும். கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தை பயன்படுத்த முடியாது. 650 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் 2 வருடங்களில் கட்டி முடிக்கப்படும். இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க 5 மீட்டர் அகலத்துக்கு நிலம் தேவைப்படுகிறது. மரங்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்படும். இந்த பாலம் எல்- வடிவில் பாலம் அமைகிறது. தற்போது டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காந்தி மண்டபம் அருகில் உள்ள தேவாலயம் பகுதியில் 5 மீட்டர் நீளத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சர்தார் பட்டேல் சாலையோரத்தில் உள்ள 225 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அதில் 75 மரங்கள் அகற்றப்பட்டு மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் நடப்பட உள்ளது.

மேலும், பொதுமக்கள் சாலைகளை கடப்பதற்காக கேந்திர வித்யாலயா பள்ளி முதல் கஸ்தூரிபா நகர் ரயில் நிலையம் வரை நடைமேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் கட்டுமானத்தின் போது போக்குவரத்து மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் கூறியதாவது: மெட்ரோ பணிகள், சாலை சீரமைப்பு பணிகள், ஐடி நிறுவனங்கள் உள்ள ராஜிவ்காந்தி சாலையில் காலை, மாலை என அனைத்து நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. வரும் கால தலைமுறைக்கு உதவும் வகையில் இந்த திட்டங்கள் அமைகிறது. அதேபோல் ஓஎம்ஆர் சாலையில் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் சந்திப்புகள் உள்ளிட்ட 5  இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.


Tags : Central Kailash , Central Kailash, L-shape 2 lane, flyover work, started
× RELATED ஆறு வழிப்பாதையாக மாற்றி அமைக்க...