சென்னை: தமிழுக்கு தொண்டு செய்த தேவநேய பாவாணர் ஒரு தனிமனித பல்கலைக்கழகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேவநேய பாவாணர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர். திமுக அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, ‘திமுக அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க’ என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர். தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.