×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் தாமதமில்லாமல் போய் சேர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு, இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், மயான பாதை வசதி ஏற்படுத்தி தருதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.  

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி  விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும். அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமுமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும். அங்கு அவர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட வேண்டும். குடியிருப்புகள் மற்றும் ஒய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.  மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்திட வேண்டும் என்றும், பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு பணியினை  நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும்.கிராமப்புறங்களில் மயான வசதி மற்றும் மயான வழிப்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். இத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாக செலவு செய்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மதிவாணன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, இயக்குநர் ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி,சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் காவல்துறை தலைவர் எஸ்.பிரபாகரன், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர்  கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu Government ,G.K. Stalin , Adi Dravidar, Tribal, Tamil Nadu, Welfare Assistance, Chief Minister, Order
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...