புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் சில சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா மாநிலங்களில் கடந்த 2013ம் ஆண்டில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்கள் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாரதா நிறுவனத்திற்கு சட்ட உதவி செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வக்கீலுமான நளினி சிதம்பரம், அதற்கு ரூ.1.26 கோடி பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, வழக்கில் சம்மந்தப்பட்ட நளினி சிதம்பரம், முன்னாள் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ தேபேந்திரநாத் தத்தா, அசாம் முன்னாள் அமைச்சர் மறைந்த அன்ஜன் தத்தா ஆகியோருக்கு சொந்தமான ரூ.3.30 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் மற்றும் ரூ.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்று தெரிவித்தது. தற்போதுவரை இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.