×

ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது வாக்காளரை எம்.எல்.ஏ. தாக்கியதால் பரபரப்பு!

ஆந்திரா: ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏவிடம் வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர ஒடிசா – 4, பிகார் – 5, ஜார்க்கண்ட் – 4, மத்திய பிரதேசம் – 8, மகாராஷ்டிரா – 11, உத்தர பிரதேசம் – 13, மேற்கு வங்கம் – 8, ஜம்மு காஷ்மீர் – 1 ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் இன்று ஒரே கட்டமாக 175 தொகுதிகளில் நடைபெறுகிறது.

மேலும் ஒடிசா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றதை சுட்டிக்காட்டிய வாக்காளரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் ஓங்கி அறைந்தார். வாக்காளரும் பதிலுக்கு சிவக்குமாரை அடிக்க, அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ.வை வாக்காளர் திருப்பி அடித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக வந்ததால் எம்.எல்.ஏ. சிவகுமாருடன் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது வாக்காளரை எம்.எல்.ஏ. தாக்கியதால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Andhra Pradesh L. ,Lok Sabha elections ,Andhra ,Lok Sabha ,Telangana ,Odisha ,
× RELATED வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்...