சென்னை: ஜி20 கல்வி மாநாடு சென்னையில் நடத்துவது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவில் நடக்க இருப்பதன் முன்னோட்டமாக நாடு முழுவதும் 50 நகரங்களில் ஜி20 கல்வி மாநாடுகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை அடுத்து, நேற்று காலை சென்னையில் 2ம் நாள் நிகழ்வை தொடங்கி வைத்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: சென்னை கல்விக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம். அதுமட்டும் அல்லாமல் வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், பண்பாட்டுச் சின்னமாகவும் இந்த நகரம் இருக்கிறது. தற்போது நாட்டின் கற்கும் இடமாகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாகவும் சென்னை இருக்கிறது.
அதனால் முதல் மாநாடு சென்னையில் தொடங்குவது பெருமையாக உள்ளது. தொடங்குகிறது. ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கு கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் கனவு என்னவென்றால், இந்தியாவின் ஜி20 மாநாட்டின் மூலம் அனைவரும் சமமான வளர்ச்சி மற்றும் நீடித்த நிலையான, பொறுப்புகளை உருவாக்குவதாக இருக்கு வேண்டும் என்பதுதான். இந்த கல்வி மாநாட்டின் மூலம் நமது நாடு ஒன்றிணைந்து தீர்வுகளை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
நீடித்த மற்றும் நிலையான இலக்கை பெற முடியும். வளர்ச்சிக்கான முக்கிய இயக்கு சக்தியாக இருப்பது கல்வி ஒன்றுதான். மக்களுக்கான அதிகாரம் அளிப்பதற்கும் ஊக்க சக்தியாகவும் இருக்கிறது. எதிர்கால மாற்றங்களை கல்வியால் தான் செய்ய முடியும். அனைத்து ஜி20 உறுப்பு நாடுகள், நல்ல தொடக்கங்களையும், சிறந்த அனுபவங்களையும் இங்கு பரிமாறிக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த பரிமாற்றங்கள் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஊக்கப்படுத்தி அதன் மூலம் எதிர்கால சிறந்த கல்வியை உருவாக்குவதற்கான தந்திரங்களை வடிவமைக்கும் என்றார்.