சென்னை: திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.6.02 கோடி செலவில் கட்டப்பட்ட சமுதாய நல கூடமான அறிஞர் அண்ணா மாளிகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.6.02 கோடி செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடமான அறிஞர் அண்ணா மாளிகையை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் 9 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், பொது சுகாதார குழு தலைவர் கோ.சாந்தகுமாரி, நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.