சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கந்தவர்கோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னதுரை (மார்க்சிஸ்ட்) பேசுகையில், ‘கோவை ஈஷா யோகா மையத்தில் மர்மமாக இறந்த சுபஸ்ரீ
மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றார் இதற்க்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து கடந்த 19ம் தேதி அன்று ஆலந்துரை காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுபஸ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணிப்பு கேமாராக்கள் பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும். இவ்வாறு அவர் பேசினார்.