கேப் டவுன்: தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் டி20 லீக் தொடர் ‘எஸ்ஏ20’ன் முதல் சீசன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடருக்கு கிடைத்த வரவேற்புக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்நாட்டு டி20 தொடர்கள் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் முதல்... வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, அமீரகம் என பல்வேறு நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெறுகின்றன.
அதன் தொடர்ச்சியாக தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு முதல் ‘எஸ்ஏ20’ என்ற பெயரில் டி20 போட்டி நடைபெற உள்ளது. இன்று கோலாகலமாகத் தொடங்கும் இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் டர்பன், ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன்+வெஸ்டர்ன் கேப், பார்ல், பிரிடோரியா, ஈஸ்டரன் கேப்+ஜிக்யூபெர்ஹா ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் லீக் ஆட்டங்கள் பிப்.7ம் தேதி வரை நடைபெறும்.
லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் பிப்.8, 9 தேதிகளில் நடக்க உள்ளன. முதலாவது எஸ்ஏ20 சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி பிப்.11ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும். கேப்டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.