×

திருமகன் ஈவெரா மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மூத்த மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்): ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனுமாகிய திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் ஈவெரா திருமகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி மிகுந்த பேரதிர்ச்சியை அளித்துள்ளது. கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் மாநில தலைவர்): காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்):  தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரச் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே  திருமகன் ஈவெரா இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: திருமகன் ஈவேரா அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய தம்பி. எப்போதும் சிரித்த முகத்தோடு திகழ்பவர். நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். இளம் வயதிலேயே நிகழ்ந்துள்ள மரணத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. தன் அருமை மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏது.

 ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திருமகன் ஈ.வே.ராவின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெராவின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வகிறேன். முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திருமகன் ஈ.வெ.ரா, மூத்த தலைவர்களின் பாசத்தையும், இளைய தலைமுறையின் நம்பிக்கையையும் பெற்றவர். அவர் இறந்து போனார் என்ற செய்தியை எளிதில் ஏற்க முடியவில்லை.

அன்புமணி ராமதாஸ்(பாமக நிறுவனர்):  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். டிடிவி.தினகரன்(அமமுக தலைவர்):  தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அரசியலில் வளர்ந்து வந்து கொண்டிருந்த இளம் வயதிலேயே திருமகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இதேபோன்று, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்பியுமான விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : Thirumakan Ivera , Death of Mr. Evera, Political Party Leaders, Condolences
× RELATED எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே...