×

கலைமாமணி விருது விவகாரத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு வாகை சந்திரசேகர் பதில்

சென்னை: தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள்  மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் தகுதியானவர்களுக்குத் தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக  தூத்துக்குடியைச் சேர்ந்த  சேர்மத்துரை என்பவர், கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக விதிகளையும், நிபுணர் குழுவை அமைக்கவும், அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.   

மேலும் நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவரும் கடந்த 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது தகுதியற்ற பல பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை திரும்ப பெற்று தகுதியானவர்களுக்கு விருது வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த மதுரை நீதிமன்றம் கலைமாமணி விருது பெறுபவர்கள் தேர்வு செய்யும் குழுவை 3 மாதத்தில் சீரமைக்க வேண்டும் என்றும், விருதுக்கு தகுதியானவர்கள் யார்? என்பதை வெளியிட வேண்டும்” எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு இயல், இசை , நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் இந்த உத்தரவு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் கூறுகையில் கலைமாமணி விருதுக்கு யாரையும் இன்னும் தேர்வு செய்யவில்லை.  ஏனென்றால் சில சட்ட சிக்கல் இருக்கிற காரணத்தினால் அதற்கான பொதுக்குழு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. அது நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் புதிதாக கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.

இந்த அரசை பொறுத்தவரை சரியான தகுதியுள்ள திறமையுள்ள நபர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதே சமயம் நீதிமன்றம் சொல்லியுள்ள அந்த வல்லுநர் குழுவை மூன்று மாதத்திற்குள் அமைத்து, அதில் தகுதியுள்ளவர்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார்


Tags : Vagai Chandrasekhar , Kalaimamani Award, Issue, Court, Question, Vagai Chandrasekhar, Answer
× RELATED மக்கள் பணத்தில் ஒரு நாளைக்கு ₹1.50 கோடி ஆடை: ‘மோடி என்னை விட சிறந்த நடிகர்’