மும்பை: ந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை (இன்று) தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்தியாவின் மைதானங்கள் குறித்து நாங்கள் அறிவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முக்கியமானவை. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் இது எங்களுக்கு மிக முக்கியமான தொடர்.இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும். அதுவும் எங்கள் வீரர்களுக்கு சாதகமாக அமையும். உலகக்கோப்பை டி20 தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.
இந்திய அணி பலமாக உள்ளது. அதனை வெல்ல மிக சிறப்பாக இலங்கை விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.இலங்கையில் நடந்த எல்.பி.எல். லீக் போட்டிகள் இளம் வீரர்களை அடையாளம் காண உதவியது. இதில் கிடைத்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும். ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டவை கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.