×

ராயபுரம் பகுதியில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட அக்கா, தம்பி திடீர் மயக்கம்

தண்டையார்பேட்டை: காசிமேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் நித்தியானந்தன் (32). இவரது மகள் கிரித்திஷா (7). மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, நித்தியானந்தன் அவரது அக்கா கல்பனா (33) ஆகியோர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் கேக் கடையில் ஒன்றரை கிலோ கேக் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் கிரித்திஷா தனது பிறந்தநாள் கேக்கை வெட்டி, அப்பாவுக்கும், அத்தைக்கும் கொடுத்துள்ளார். அப்போது, அத்தை கல்பனா கேக்கை சாப்பிட்டு விட்டு கசப்புத்தன்மை இருப்பதாக கூறி உள்ளார். அதனைதொடர்ந்து நித்தியானந்தமும் கேக்கை சாப்பிட்டு கசப்புத்தன்மை இருப்பதாக கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். இதனால், அவர்கள் கேக் வாங்கிய கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு, கடையில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த கேக் இப்படி தான் இருக்கும் என அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த நித்தியானந்தனும், கல்பனாவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் போலீசார் கேக்கை சிறிதளவு மாதிரிக்காக எடுத்துக்கொண்டு, கேக்கை சாப்பிட்டு வாந்தி எடுத்த அக்கா, தம்பி ஆகிய 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்த காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rayapuram , Sister and brother fainted after eating birthday cake in Rayapuram area
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...